பயணங்கள் பலவிதம் - 01
சித்திரைக் கொண்டாட்டங்கள் முடிவடைந்து விட்டன. ஒருவார கால விடுமுறையும் முடிவடைந்து விட்டது. நாளை 18ஆம் திகதி மீண்டும் வழமை போல் பணிக்குச் சமூகமளிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு எழுந்து தயாராகி வேலைக்குச் சென்றால் இரவு ஒன்பது மணிக்குத் தான் வீடு திரும்ப முடியும். ஓய்வு ஒழிச்சல் இல்லாத நரக வாழ்க்கை. தினமும் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் மாதாந்த வரவு-செலவில் துண்டு விழும்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தல் போல ஒவ்வோர் ஆண்டும் தை மாதத்திலும் சித்திரை மாதத்திலும் தமிழரின் புத்தாண்டு தையா சித்திரையா என்று விவாதம் நடத்த வேண்டியிருக்கிறது. தைமாதம் தான் தமிழரின் புத்தாண்டு என்பதை எவ்வளவு புரிய வைத்தாலும் நம்மவர்கள் விளங்கிக் கொள்வதாக இல்லை. காலம் தான் இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
இம்முறை சித்திரை விடுமுறையை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தேனே தவிர கொண்டாட வேண்டும் என்று நினைக்கவில்லை. சித்திரைப் புத்தாண்டு என்று வந்து கொண்டிருந்த வாழ்த்துக்கள் ஒரு பக்கம் கடுப்பைக் கிளப்பிக் கொண்டிருந்தன. எங்கள் ஊரில் தொடர்ச்சியாகப் பெய்த மழையும் குளிரான கால நிலையும் வீட்டை விட்டு வெளியே நகர அனுமதிக்கவில்லை.
இன்று எனது சொந்த ஊரான கொட்டகலையில் இருந்து கொழும்புக்கு இரயிலில் திரும்பி வருவதற்காக கடந்த மாதமே ஆசன முன்பதிவு செய்திருந்தேன். கொழும்பில் இருந்து கொட்டகலைக்கு செல்ல ஆசன முன்பதிவு செய்ய முயன்ற போதும் ஏப்ரல் 10, 11 திகதிகளில் அனைத்து ஆசனங்களும் முன்பதிவு செய்து முடிக்கப் பட்டிருந்தன. திரும்பி வருவதற்கும் இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்யக் கோரிய போதும் மூன்றாம் வகுப்பில் தான் இடம் கிடைத்தது. கிடைத்ததை விட்டுவிட்டால் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டி வரும் என்பதால் மூன்று ஆசனங்களை முன்பதிவு செய்து கொண்டேன்.
எனக்கு பேரூந்துப் பயணம் ஒத்து வராது. சௌகரியமும் இல்லை. புகையிரதப் பயணம் எனக்குப் பிடித்தமானதும் கூட. இயற்கையினூடே பயணிக்கும் அனுபவம் அலாதியானது. ஆனால் இன்றைய பயணம் வெயிலின் சதியினால் சற்றுக் கொடுமையானதாகவே இருந்தது.
சித்திரை விடுமுறைக்காக ஊருக்கு சென்ற நாளில் இருந்து காலை எழும்பும் நேரம் ஒன்பது அல்லது பத்து மணியாக இருந்தது. ஆனால் இன்று காலை வேளையிலேயே புகையிரதத்தில் பயணிக்க வேண்டியிருந்ததால் அதிகாலை எட்டு மணிக்கெல்லாம் எழுந்து விட்டேன். எடுத்து வர வேண்டிய பொருட்கள் எல்லாம் நேற்றே தயார்படுத்தி வைக்கப் பட்டிருந்ததால் இன்று காலையில் அதிக சிரமம் இருக்கவில்லை.
காலை 09.50 அளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு வீதிக்கு வந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு புகையிரத நிலையம் வந்து சேர்ந்தோம். எழுபது அல்லது எண்பது ரூபாய் தான் நாங்கள் பயணித்த தூரத்திற்கான வாடகையாக இருக்க வேண்டும். ஆனால் ஓட்டுநர் அநியாயமாக நூற்றைம்பது ரூபாயைக் கொள்ளையடித்தார். மனதிற்குள் திட்டிய படியே புகையிரதம் வரும் மேடைக்கு வந்து சேர்ந்தோம். நான், மனைவி மற்றும் மனைவியின் தாயார் ஆகிய மூவரோடு பதினோரு மாதக் கைக்குழந்தையும் எங்களுடன் பயணிக்கத் தயாராகியிருந்தது.
காலை 10.15க்கு வர வேண்டிய புகையிரதம் காலை 10.40க்குத்தான் வந்தது. இருபத்தைந்து நிமிடங்கள் தாமதம். பிறகு வழி நெடுகிலும் ஆங்காங்கே சில தாமதங்கள். நாங்கள் பேரூந்தில் பயணிப்பதானால் கொட்டகலையில் இருந்து ஹட்டன் வந்து ஹட்டனில் இருந்து வட்டவளை, கினிகத்தேனை, கித்துல்கல, கரவானெல்ல, அவிசாவளை, கடுவலை, கடவத்தை வழியாக கொழும்பை வந்தடைய வேண்டும். பகல் நேரத்தில் நான்கரை மணிநேரப் பயணம். நள்ளிரவில் மூன்று மணிநேரத்தில் கூட சென்று விடலாம். ஆனால் புகையிரதத்தில் ஐந்தரை மணிநேரம் முதல் ஆறரை மணிநேரம் வரையில் பயணிக்க வேண்டும். காரணம் கொட்டகலை, ஹட்டன், வட்டவளை வழியாக நாவலப்பிட்டி, கம்பளை, கண்டி சென்று கொழும்பை வந்தடையும். இது சுற்று வழி. ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட புகையிரத வழித்தடம்.
இலங்கையில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான புகையிரத வழித்தடங்கள் ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்டவை. பெரும்பாலான புகையிரத நேர அட்டவணைகளும் கூட ஆங்கிலேயரால் வகுக்கப் பட்டவை தான். நமது ஆட்சியாளர்களால் இவற்றை முழுவதுமாக மாற்றியமைத்து விட முடியவில்லை. நாவலப்பிட்டியில் இருந்து அவிசாவளையை இணைக்கும் புகையிரத வழித்தடத்தை நிர்மாணித்தால் பேரூந்தை விட குறைவான நேரத்தில் புகையிரதத்தின் மூலம் கொழும்பை வந்தடையக் கூடியதாக இருக்கும். காரணம் அவிசாவளையில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவை நடைமுறையில் உள்ளது.
நாங்கள் பயணித்த புகையிரதம் நேர அட்டவணைப்படி மாலை 03.30க்கு கொழும்பை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் 04.15க்குத்தான் கொழும்புக்கு வர முடிந்தது. 45 நிமிடத் தாமதம். வீட்டுக்கு வந்து சேரும் போது மாலை 05.15 ஆகி விட்டது. வந்ததும் வீட்டை ஒதுங்க வைத்து விட்டு, தேநீரை அருந்தி விட்டு... என்ன விட்டு, விட்டு? எழுதுவதை விட்டு விட்டு போய் தூங்கு, நாளைக்கு வேலைக்கு போகணும்ல?
பயணங்கள் பலவிதம் - இன்னும் பேசலாம்...
#பயணம் #புகையிரதம் #சித்திரை #அனுபவம் #சிகரம்பாரதி #TRAVEL #TRAINTRAVEL #EXPERIENCE #SIGARAMBHARATHI
சுவையான பதிவு
ReplyDeleteநல்லதொரு பயணஅனுபவம் நண்பரே .சிறு வயதில் நான் பயணித்து இருக்கிறேன்.பின்னர் பயணித்ததில்லை.இன்றளவும் பழைய தண்டவாளங்கள் ,ரயில்கள் ,ரயில்பெட்டிகள் என்றே இலங்கை காலத்தினை கொண்டு போகிறது,
ReplyDeleteஉங்கள் எழுத்து வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது .நிறைய எழுதுங்கள்.வாசிப்போம் ....
நன்றி
நல்லதொரு பயண அனுபவம். புகையிரதம் - நல்ல வார்த்தைப் பயன்பாடு.
ReplyDeleteபுகையிரதம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சுது இந்த பேரு. நல்ல சொல்லாடல்
ReplyDelete