பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்
இதன் வரலாறு 1920-களில் தொடங்குகிறது. இன்றைக்கு, பத்தி எழுத்து என்ற இந்த எழுத்துவகைதான், ஊடக உலகில் மிக முக்கியமான அரசியல் மற்றும் சமுதாய விஷயங்களைப் பேசுகிற, குரல் கொடுக்கிற எழுத்தாக உலகெங்கும் மாறியுள்ளது. பத்திகள் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் பத்திகள் உண்டு என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது. மேலைநாடுகளில் பத்தி எழுதுபவர்களை Columnist என்பார்கள்.
அவர்களை,
Advice columnist
Critic
Editorial opinion columnist
Gossip columnist
Humor columnist
Food columnist - என்று பிரிப்பது வழக்கம்.
Advice columnist – என்பது கேள்வி பதில்களாக சமகால வாழ்வில் உண்டாகும் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்பவர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது பிரசித்தமான ஒரு எழுத்துமுறை. உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினையை நீங்கள் கடிதமாக எழுதினால் தீர்வு சொல்வார்கள்.
Critic – என்பவர்கள் விமர்சகர்கள், கலை, இலக்கியம், கட்டுமானம், உணவு போன்ற துறைகளில் விமர்சிப்பவர்கள்.
Editorial opinion columnist – சமகால அரசியல் சமூக நிகழ்வுகளைப் பற்றிய விமர்சனம் அடங்கிய பத்திரிக்கைத் தலையங்கம் எழுதுபவர்கள்.
Gossip columnist – பிரபலங்களைப் பற்றி, அவர்களது படைப்புகள் குறித்த விமர்சனங்களை பெயர் குறிப்பிடாமல் எழுதுபவர்கள் (கிசுகிசு).
Humor columnist – சமகால நிகழ்வுகளை, அரசியலை, நபர்களை பகடியாக விமர்சிப்பது. இதில் நகைச்சுவை ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும்.
Food columnist – உணவகங்கள், உணவுமுறைகள் குறித்த எழுத்து.
இதுபோக இன்று பங்குவர்த்தகம் மற்றும் அதன் போக்கு குறித்த பத்திகளும் வெளிவருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் குஷ்வந்த் சிங், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, குல்தீப் நாயர், ஷோபா டே, கன்வால் பார்தி போன்றவர்கள் பத்தி எழுத்துகளில் உலகளவில் அறியப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாமரன், ஞாநிசங்கரன் போன்றவர்களைப் பத்தி எழுத்தாளர்களாகக் குறிப்பிடலாம். சாரு நிவேதிதா, எஸ்.ரா, சுஜாதா போன்ற எழுத்தாளர்களும் கூடப் பத்திகளை எழுதியிருக்கிறார்கள். இன்றைக்கு இணையத்தில் Blog, Facebook போன்றவற்றில் எழுதப்படுகிற எழுத்துகளைக்கூடப் பத்தி எழுத்துகளாகவே அடையாளம் காட்டுகிறார்கள்.
பத்தி என்பதன் விளக்கம் என்னவென்று பார்ப்போமானால்:
An article on a particular subject or by a particular writer that appears regularly in a newspaper or magazine. அதாவது ஒரு குறிப்பிட்ட பொருள் சார்ந்து அல்லது ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரால் செய்தித்தாள் அல்லது பத்திரிகையில் தொடர்ந்து எழுதப்படும் எழுத்து. அந்த வகையில் யோசிக்கும்போது பத்தி எழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கணத்துக்குள் இல்லாமல் free form போலத் தோன்றினாலும் ஒரு எளிமையான Formula பத்திகளுக்கு உண்டு. அதை 4S என்று சொல்வார்கள்.
![]() |
Image Credit : Google / tinaruggiero.com |
Make it short – அளவு – பொதுவாக ஒரு 1000 வார்த்தைகளுக்குள் சொல்லி முடிக்கவேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் இன்னமும் சிறப்பு.
Make it simple – எளிமை – வாசகனின் அறிவுப்பரப்பு குறித்த தெளிவுடன் இருத்தல், அவனுக்குப் புரிகிற மொழியில், புரியக்கூடிய விஷயங்களை மட்டுமே பேசுவது.
Make it sound – தெளிவு – உங்கள் எழுத்து உங்களுடைய தரப்பைத் தெளிவாகப் பேசவேண்டும். உங்களுடைய கருத்துகளை தெளிவாக எடுத்து வையுங்கள்.
Make it sing – தனித்தன்மை – பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவது, தனித்தன்மையான வாக்கிய அமைப்புகளை உருவாக்குவது. உங்கள் எழுத்து மற்றவர்களிடமிருந்து தனியாகத் தெரியும்படி அமைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு நல்ல பத்தியை எழுதவும் அடையாளம் காணவும் இக்குறிப்புகள் உதவும். பத்திகள் கட்டுரையைப் போலவே ஒரு ஆரம்பம் அதாவது முன்னுரை மற்றும் உடல்பகுதி, முடிவுரை என்று மூன்று விதமாக பகுக்கக் கூடியதாக இருக்கும். பத்திகளில் தன்னிலை வாக்கியங்கள் குறைவாக இருக்கவேண்டும், அடிக்கடி எழுதப்படக்கூடாது, அப்படி எழுதினால் அது சுய அனுபவக் கட்டுரைகள் அதாவது Anecdote என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள், அந்த வகைமைக்குள் வந்துவிடும். எனவே சுய அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுவோமானால் அதைப் பத்திகள் என்று சொல்லக்கூடாது. ஒரு நிகழ்வில் ஏதேனும் ஒரு சார்புநிலையில் இருந்து எழுதப்பட வேண்டும். இவ்வளவுதான் பத்தி என்பதன் இலக்கணம்.
மேலும் பத்தி எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்…
* பத்தி எழுதுபவர்கள் ஒரு நிகழ்வில் ஏதேனும் தரப்பைத் தேர்ந்தெடுத்து எழுதுவது அவசியம், மதில்மேல் பூனை நிலை உதவாது.
* தம்முடைய தரப்பில் கவனம் செலுத்தவேண்டும்.
* அதேசமயம் எதிர்தரப்பினர் வைக்கக்கூடிய வாதங்கள் குறித்தும் யோசிக்க வேண்டும்.
* ஒப்பீடுகளோடு கருத்தை விளக்குவது எளிதில் புரியவைக்கும்.
* தனி மனிதரையோ, அரசியல் சமூக நிகழ்வுகளையோ அல்லது சூழலையோ விமர்சிப்பதில் தவறில்லை, தைரியமாக விமர்சிக்கவேண்டும்.
* எழுத்தில் எப்போதேனும் சுய அனுபவம் சேர்வதும், உள்ளூர் சமாச்சாரங்களும் பத்தியை சுவாரசியமாக்கும்.
* உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்கும் உண்மை நிகழ்வுகளைக் குறிப்பிடுங்கள்.
* களத்தில் இறங்கிச் செய்திகளை சேகரித்து அவற்றைத் தெரியப்படுத்துவது நல்ல உத்தி.
* உங்கள் கருத்தில் அழுத்தம் திருத்தமாக இருங்கள், மேம்போக்கான கருத்துகளை யாரும் ஒருபோதும் விரும்புவதில்லை.
* ஒரு சிக்கலில் வெறுமனே அதைக்குறை சொல்வதை விட்டுவிட்டு அதற்குத் தீர்வு சொல்ல முயலுங்கள். அதுதான் தேவை, குறை சொல்வது என்பது யாராலும் முடியக்கூடியதே.
குறிப்பு: இக்கட்டுரை 'ஸ்ரீதர் ரங்கராஜ்' என்னும் எழுத்தாளரால் 'வல்லினம்' என்னும் இணையத்தளத்தில் 'பத்தி எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி ஆகும்.
வாசகர்களுக்கு 'பத்தி எழுத்து என்றால் என்ன' என்னும் தெளிவை வழங்குவதற்காக இது இங்கு பிரசுரிக்கப்படுகிறது. எழுதிய எழுத்தாளருக்கும் வெளியிட்ட இணையத்தளத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.
பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்
https://newsigaram.blogspot.com/2019/05/paththi-eluththu-endraal-enna-what-is-column-writing.html
#பத்தி #எழுத்து #வல்லினம் #ஸ்ரீதர்_ரங்கராஜ் #பத்திரிகை #columnist #Advice #Critic #Editorial #Gossip #Humor #Food #Writing #NewsPaper
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்