அகவை 25 இல் சன் தொலைக்காட்சி!
வணக்கம் நண்பர்களே. சித்திரைக் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிவடைந்து விட்டதா? சொந்த பந்தங்களுடன் சித்திரையைக் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். சித்திரை தமிழர்களாகிய நமக்குப் புத்தாண்டு அல்ல. தை தான் நமக்குப் புத்தாண்டு. தமிழறிஞர்கள் பலரும் இதனை ஆராய்ந்தறிந்து தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தெளிவு படுத்தியுள்ளனர்.
சன் தொலைக்காட்சி 14.04.2018 இல் தனது இருபத்தைந்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. மகிழ்ச்சி. ஒளிபரப்பு ஊடகத்துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் என்பது மிகச் சாதாரணமானது அல்ல. பல தடைகளைத் தாண்டி இன்று தமிழகத்திலும் இந்திய அளவிலும் ஏன் உலக அளவில் கூட தனக்கென தனியிடத்தைப் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் கருணாநிதி அவர்களின் தமிழ்க் குடும்பத்தில் இருந்து பிறந்த சன் தொலைக்காட்சி தமிழுக்கு என்ன செய்திருக்கிறது என்று கேட்டால் எதுவுமில்லை என்பது தான் பதிலாக இருக்கிறது. ரசிகர்களைப் பரவசப்படுத்துகிறோம் என்கிற பெயரில் தமிழை அழித்தது தான் மிச்சம். மேலும் சன் தொலைக்காட்சியின் சின்னத்திரை நாடகங்களுக்கு ஆயிரக்கணக்கான குடும்பத் தலைவிகள் அடிமை.
வணிக இலாபத்திற்காக என்னமும் செய்யலாம் என்னும் கொள்கை கொண்டது தான் சன் தொலைக்காட்சி. ஒரு நாளில் பத்து மணி நேரத்துக்கும் அதிகமாக தொலைக்காட்சித் தொடர்களை ஒளிபரப்பி குடும்பத் தலைவிகளை அடிமையாக்கி சந்தோஷப்பட்டுக்கொள்கிறது.
இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை. சன் தொலைக்காட்சிக்கு உதவியாக விஜய், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி அலைவரிகளும் செயற்பட்டு வருகின்றன. தமிழ்ச்சமூகத்தின் வீழ்ச்சியில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. அதில் வெள்ளித்திரை (சினிமா) முதலிடத்தை வகிக்கிறது. இரண்டாமிடத்தை தமிழ்த் தொலைக்காட்சிகளும் மூன்றாமிடத்தை அச்சு ஊடகங்களும் வகிக்கின்றன. இணைய ஊடகங்கள் கடைசி இடத்தைப் பிடித்தது ஆறுதல்.
இந்த நிலைமை என்று மாறுமோ அன்று தான் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்பது மட்டும் நிச்சயம். சந்திப்போம், சிந்திப்போம் நண்பர்களே!
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்