பயணங்கள் பலவிதம் - 04

மகிழ்ச்சி! மகிழ்ச்சி எதில் இருக்கிறது? எங்கே இருக்கிறது? மகிழ்ச்சி மனதிற்கு உள்ளேயா அல்லது வெளியேவா இருக்கிறது? அதை எப்படி அடைவது? எவ்வாறு கண்டுகொள்வது? நமக்குக் கிடைக்குமா, கிடைக்காதா? ஒரு மனிதனால் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து விட முடியுமா? இக்கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிவது கடினம். கண்டறிந்தால் அவனை விட மகிழ்ச்சியாக யாரும் வாழ்ந்து விட முடியாது.



2018.05.19 ஆம் திகதி! ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்தில் எனது ஏழு வருட சேவைக் காலத்தின் இறுதி நாள். கனத்த இதயத்துடன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டேன். ஆறு வருடங்கள் இருப்புக் கட்டுப்பாட்டாளராகவும் (Material Controller) ஒரு வருடம் தரவு உள்ளீட்டாளராகவும் (Data entry Operator) பணி புரிந்திருக்கிறேன். மாறி வரும் வணிகச் சூழலில் நாம் எவ்வளவுதான் உயிரைக் கொடுத்து வேலை செய்தாலும் நிறுவனங்கள் அவற்றைப் பொருட்படுத்துவதேயில்லை. அவரவர் பைகளை நிறைத்துக் கொண்டால் அவரவருக்குத் திருப்தி தான். 



எனது மனைவியும் அதே நிறுவனத்தில் உதவியாளராக (Helper) நான்கு வருடங்கள் பணிபுரிந்து கடந்த 2018.04.28 திகதியில் சேவையை விட்டு விலகினார். அவருடைய சம்பளம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்ட விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த இரண்டு வாரங்களாக கொழும்பில் என்னுடன் அவரது அண்ணாவின் இல்லத்தில் தங்கியிருந்தார். 



2018.05.20 திகதி காலை நான், மனைவி, குழந்தை கிருத்திகா மற்றும் மனைவியின் தந்தை ஆகிய நால்வரும் கொழும்பில் இருந்து கொட்டகலை நோக்கிப் பயணிக்க ஆயத்தமானோம். காலை உணவை உட்கொண்ட பின் முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி விரைந்தோம். 



சரியாக காலை 08.30 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் மூன்றாம் மேடைக்கு கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் S12 வகுப்பைச் சேர்ந்த (Class S12 MCG 924) 1015 என்னும் இலக்க புகையிரதம் வந்து சேர்ந்தது. நாங்கள் ஏற்கனவே ஆசன முன்பதிவு செய்திருந்ததால் மூன்றாம் வகுப்பில் எங்களுக்கான ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் சென்று அமர்ந்து கொண்டோம். 



காலை 08.34க்கு புகையிரதம் தனது பயணத்தைத் துவங்கியது. கொழும்பில் இருந்து ஆங்காங்கே மழை பெய்த வண்ணமேயிருந்தது. போகப்போக மழை மறைந்து வெயில் தென்பட்டது. ஆரம்பத்தில் புகையிரதம் வழமையான வேகத்தை விட குறைந்த வேகத்திலேயே பயணித்துக் கொண்டிருந்தது. அளவ்வ (Alawwa) புகையிரத நிலையத்தை அண்மிக்கும் போது வேகமெடுத்தது புகையிரதம். என்றாலும் ஆங்காங்கே குறைவான வேகத்தை அவதானிக்க முடிந்தது. 



மலையக புகையிரத வழித்தடத்தில் கொழும்பில் இருந்து இறம்புக்கணை வரையில் மட்டுமே இருவழிப் புகையிரதப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இறம்புக்கணை முதல் பதுளை வரை ஒற்றை வழிப் பாதை தான் உள்ளது. ஆதலால் எதிர்ப்புறத்தில் இருந்து புகையிரதம் வரும் பட்சத்தில் இரண்டு புகையிரதங்களில் ஒன்று புகையிரத நிலையமொன்றில் தரித்து நின்று காத்திருக்க வேண்டும். மற்றைய புகையிரதம் குறித்த தரிப்பிடத்திற்கு வந்து சேர்ந்த பின்னரே காத்திருக்கும் புகையிரதம் பயணத்தை துவங்க முடியும். இது பயணத்தில் தாமதத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமைகிறது. மழைக் காலத்திலும் குறைவான வேகத்திலேயே பயணிக்கும். 



கம்பளை புகையிரத நிறுத்தத்திற்கு அடுத்த நிறுத்தமான உலப்பனை நிறுத்தத்தில் நண்பகல் 12.20 முதல் 12.33 வரை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் (Class S12 - MCG 928) புகையிரத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 



இவ்வாறான நிகழ்வுகள் மலையகத்தில் சகஜமானவை. மலையக புகையிரத வழித்தடத்தில் சுரங்கப் பாதைகள் நிறைய இருக்கின்றன. மழை காரணமாக நாவலப்பிட்டியில் இருந்து குறைவான வேகத்தில் புகையிரதம் பயணித்தது. மழை பெய்ததால் குளிராக இருந்தது. ஆகவே கொஞ்சம் உறங்கினேன்.



றொசால்லை புகையிரத நிலையத்தில் பகல் 01.40 மணி முதல் 01.50 மணி வரை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மற்றுமொரு புகையிரதத்திற்காக (Class S12 MCG 930) காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

2016 ஆம் ஆண்டு நான் பயணித்த புகையிரதம்
தடம் புரண்ட போது எடுத்த புகைப்படங்கள் 


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எனது திருமண விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக மனைவியின் வீட்டில் இருந்து வருவதாகச் சொல்லியிருந்த தினம் நான் கொழும்பில் இருந்து கொட்டகலைக்கு சிவப்பு நிற புகையிரதத்தில் பயணம் செய்தேன். அப்போது இதே றொசால்லை புகையிரத நிலையத்திற்கு சற்றுத் தூரத்தில் வைத்து நான் வந்த புகையிரதம் தடம் புரண்டது. இந்நிகழ்வு இணையத்தில் செய்தியாகக் கூட வெளியாகியுள்ளது. என்ஜினின் முன் சக்கரம் கழன்று தடம் புரண்டிருந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்குள் ஹட்டனில் இருந்து புகையிரதமொன்றை அனுப்பி வைத்தனர். 

2016 ஆம் ஆண்டு நான் பயணித்த புகையிரதம்
தடம் புரண்ட போது எடுத்த புகைப்படங்கள்


அது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதம். றொசால்லைக்கு அருகில் நாங்கள் வந்த புகையிரதம் தடம் புரண்டதால் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதத்தில் கொழும்பில் இருந்து வந்த பயணிகளை மாற்றி ஏற்றிவிட்டு நாங்கள் வந்த புகையிரதத்திற்கு நாவலப்பிட்டியில் இருந்து என்ஜினை வரவழைத்து பெட்டிகளை மட்டும் இணைத்து நாம் வந்த புகையிரதத்தை அப்படியே கொழும்பு நோக்கிப் பயணிக்கச் செய்தனர். நான் வீட்டை வந்தடைந்த போது பெண் வீட்டார் புறப்படத் தயாராகியிருந்தனர். நான் வந்ததும் சிறிது நேரம் அளவளாவி விட்டுச் சென்றனர். அந்த நிகழ்வை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும்.

2016 ஆம் ஆண்டு நான் பயணித்த புகையிரதம்
தடம் புரண்ட போது எடுத்த புகைப்படங்கள்


கொட்டகலை புகையிரத நிலையத்தை பகல் 02.20 மணிக்கு வந்தடைந்தோம். மழை பெய்து கொண்டிருந்தது. ஹட்டன் புகையிரத நிலையம் வரும்போதே முச்சக்கர வண்டி நண்பருக்கு அழைப்பை ஏற்படுத்தி கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு வருமாறு கூறியிருந்ததால் அவர் கொட்டகலை புகையிரத நிலைய வாயிலில் தயாராக இருந்தார். புகையிரதத்தில் இருந்து இறங்கியதும் முச்சக்கர வண்டியில் சென்று ஏறி வீட்டை நோக்கி விரைந்தோம்.

#சிகரம் #சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #இரயில்பயணங்கள் #SigaramBharathi #travel #experience #traintravelling #travellanka

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!