சிகரம் பாரதி 8/50
வணக்கம் வலைத்தள வாசகர்களே!
2016.10.06
இரண்டு வருடங்களுக்கு முன்பே அதாவது கடந்த கூட்டொப்பந்த சம்பள அதிகரிப்பின் போதே இந்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரப்பட்டது. ஆனால் அப்போது ரூ 620 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் வெறும் 110 ரூபாவே இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருட காலப்பகுதியில் வாழ்க்கைச் செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் 17 % த்தால் மட்டுமே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மலையகக் கட்சிகளின் கூட்டணி இன்று (2016.10.06) அறிவித்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 730 ரூபா நாட்சம்பளம் இன்றைய சூழலுக்குப் போதுமானதா? 30 நாட்களும் தொழில் புரிந்தாலே 21,900 ரூபா மட்டுமே கிடைக்கும். மேலும் எல்லா நாட்களும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படப் போவதில்லை. கொழுந்தின் அளவு மற்றும் வரவு ஆகியன இந்த 730 ரூபாவில் தாக்கம் செலுத்தும். ஆகவே மீண்டும் மிகக் குறைந்த வேதனம் ஒன்றையே மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளப் போகின்றனர். மலையக மக்கள் சிந்தித்துச் செயல் பட வேண்டிய நேரம் இது. சிந்திப்பீர்களா?
2016.10.07
இது நவராத்திரி பூஜைக் காலம். தமிழகத்தின் முன்னணி தமிழ்த் தொலைக்காட்சிகள் ஒன்றில் கூட நவராத்திரி தொடர்பான சமய நிகழ்ச்சிகளைக் காணோம். தொலைக்காட்சித் தொடர்களும் திரைப்படங்களும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுமாய் தொலைக்காட்சிகளின் பொழுது கழிந்து வருகிறது. அரைமணித்தியால காலப்பகுதிக்குள் மூன்று விளம்பர இடைவேளைகள் வருகின்றன. இதில் ஒரு விளம்பர இடைவேளையை சரஸ்வதி பூஜை சிறப்பு நிகழ்ச்சிக்காக ஒதுக்கலாமே? சரஸ்வதி பூஜையின் இறுதி நாளான விஜய தசமி அன்று 'சிறப்பு நிகழ்ச்சிகள்' என்று ஒளிபரப்புவார்கள். அதில் இரண்டு பக்திப் பாடல்களுடன் மற்றையதெல்லாம் சினிமாக் குப்பைகளாகத்தான் இருக்கும். ஏன் இந்த நிலை? இலங்கையிலும் நான்கு உள்ளூர்த் தமிழ்த் தொலைக்காட்சிகள் இயங்கி வருகின்றன. அவற்றிலும் இதே நிலைதான். ஆனால் இலங்கையில் விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகளெல்லாம் கிடையாது.
இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் நோன்புப் பெருநாள் நாட்களில் மூன்று வேளையும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். ஆனால் சரஸ்வதி பூஜையை கண்டுகொள்வதே இல்லை. இந்த நிலை எதனால்? சைவ சமய நிகழ்ச்சிகளுக்கும் நமது தமிழ்த் தொலைக்காட்சிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்? சிந்திப்பீர், செயல்படுவீர்!
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்