சிகரம் ஆசிரியர் பக்கம் | SIGARAM EDITORIAL | 17.09.2018
வணக்கம் சிகரம் வாசகர்களே!
நமது கல்விமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். நமது கல்வி முறை தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பாடப்புத்தகத்தை மனனம் செய்து விடைத்தாளில் ஒப்புவிக்கும் தேர்வு முறை தான் நமது அறிவைப் பரிசோதிக்கும் ஆயுதமாக இருக்கிறது. ஆறாவது வயதில் பாடசாலையில் அனுமதிக்கப்படும் மாணவன் பதினெட்டு வயதில் பாடசாலையை விட்டு வெளியேறுகிறான். பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வருடங்களை ஒரு மாணவன் பாடசாலையில் கழிக்க வேண்டியிருக்கிறது.
பல்கலைக்கழகத்தில் நான்கு அல்லது ஐந்து வருடங்களை ஒரு மாணவன் செலவழிக்க வேண்டும். கல்விச் சிறையில் இருந்து தனது இருபத்தைந்தாவது வயதில் வெளியேறும் மாணவன் சமூகத்தை மன உறுதியுடன் எதிர்கொள்ள முடியாது போகிறது. பாடப்புத்தக அனுபவத்திற்கும் சமூக அனுபவத்திற்குமிடையில் காணப்படும் பாரிய இடைவெளி அச்சத்தையும் பயத்தையும் மாணவனுக்கு அளிக்கிறது.
மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்பட வேண்டும். பதின்மூன்று வருட பள்ளிக்கல்வி ஐந்து வருட அடிப்படைக் கல்வி, மூன்று வருட இடைநிலைக் கல்வி மற்றும் ஐந்து வருட உயர்நிலைக் கல்வி என வகுக்கப்பட வேண்டும். மேலும் பல்கலைக் கழகக் கல்வி மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட வேண்டும். பல்கலைக் கழகக் கல்வி முழுவதும் பகுதி நேரத் தொழிலையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பாடசாலைக் கல்வியின் ஐந்து வருட உயர்நிலைக் கல்வியும் பகுதி நேரத் தொழிலை உள்ளடக்கியதாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
அடிப்படைக் கல்வி முதலே கணினித் தொழிநுட்பம் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் ஆண்டிறுதி அல்லது தடைதாண்டல் பரீட்சைகளின் போது கல்வி சாரா செயற்பாடுகளுக்கும் சரிபாதி மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டு கல்வி சார் மதிப்பெண்கள் மற்றும் கல்விசாரா மதிப்பெண்கள் இரண்டும் இணைக்கப்பட்டு மாணவனின் பெறுபேறுகள் அளவிடப்பட வேண்டும்.
இவ்வாறாக கல்வித்துறை மாற்றங்களைச் சந்திக்க வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான மாணவர்களை உருவாக்க முடியும். சிறந்த தொழிற்படையை நாட்டில் இதன் மூலம் உருவாக்க முடியும். மாணவர்களின் உயர்நிலைக் கல்வி முதல் அரசியலையும் கற்றுத் தருவதன் மூலம் மாணவர்களின் சமூக அறிவையும் அக்கறையையும் மேம்படுத்த முடியும். மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது. கல்வித்துறை மாற்றங்களைச் சந்திப்பது எப்போது?
-சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்