கண்ணதாசா | கவிதை | மானம்பாடி புண்ணியமூர்த்தி
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மறைந்த நாளில் என்னால் எழுதப்பட்டு இதுவரை என்னிடமே இருந்துவரும் கண்ணீர் அஞ்சலி (1981-2018) 37 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பார்வைக்கு!
****
கவிதைமழை
பொழிந்து வந்த
கவிஞர்கோவே
கண்ணபிரான்
பற்றுமிக்கக்
கண்ணதாசா -நீ
காலனுடன் சென்றுவிட்ட
செய்திகேட்டுக்
கலங்குதய்யா
எந்தனுள்ளம் கரையுதைய்யா!
அழகுதமிழ் மலராலே
பாத்தொடுத்து
அவனியெலாம்
மணம்பரப்பத்
தந்தவேந்தே
பழகுதமிழ் வார்த்தையெலாம்
நீ மறந்து
பறந்துவிட்ட கொடுமைகண்டு
பதைக்குதய்யா!
தாலாட்டுப் பாடல்முதல்
சாவின் எல்லை
வேக்காட்டில் வேகும்வரைப்
பாடல்தந்தாய்
வித்தகனே தத்துவத்தின்
எல்லைக்கோடே
விழியிரண்டும்
கண்ணீரில் மூழ்குதய்யா!
விடுகின்றமூச்செல்லாம்
கவிதையாக்கும்
வித்தையினைக் கற்றவனே
கண்ணதாசா
நெடுமூச்சை உள்ளடக்கி
நிலத்தின்மீதே
விழிமூடிப்
படுத்தனையோ
எங்கள்நேசா!
கண்ணனுக்கே மரணமென்றால்
கலங்கமாட்டேன்
கண்ணதாசன் பிரிவதென்றால்
தாங்கமாட்டேன்
எனச்சொல்லி இருந்தேனே
இனியதேனே
என்நெஞ்சை ஏனய்யா
நெருப்பால் சுட்டாய்!
கவித்திறத்தால்
கண்கலங்க வைத்ததாசா
கண்ணீரை நிரந்தரமாய்த்
தந்துவிட்டாய்
தமிழ்வாழும் காலம்வரை
உனதுபாடல்
தத்துவமாய் எம்நெஞ்சில்
நிலைக்குமய்யா!
****
பழைய நினைவைப் பகிர்ந்துகொண்ட நிறைவுடன், உங்கள் கவிஞன் மானம்பாடி புண்ணியமூர்த்தியின் வணக்கமும் வாழ்த்துகளும்!
கண்ணதாசா | கவிதை | மானம்பாடி புண்ணியமூர்த்தி
http://newsigaram.blogspot.com/2018/10/kannadasa-poem-manampadi-punniyamoorthy.html
http://newsigaram.blogspot.com/2018/10/kannadasa-poem-manampadi-punniyamoorthy.html
#கவிதை #தமிழ் #கண்ணதாசன் #கவிஞர் #திரையிசை #பாடல் #பாடலாசிரியர் #காதல் #தத்துவம் #எழுத்தாளர் #தமிழகம் #சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்