நாளைய தமிழக முதல்வர் யார்?
வணக்கம்! இன்றைய தமிழக அரசியல் சூழலில் #tn_sasikala #TamilnaduRevolution #RIPADMK #Enforce_President_Rule_in_TN #TnsaysNotoSasikala #TNneedsReElection போன்ற குறிச்சொற்கள் (Hashtags) சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றன. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டது முதல் தமிழகம் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறது. ஜெயலலிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் தமிழக மக்கள் அவருக்கு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் தமிழக முதல்வராகும் வாய்ப்பை அளித்தனர். ஆனால் அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் மரணப் படுக்கையில் வீழ்ந்தார் ஜெயலலிதா. அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கருதப்பட்டாலும் எதிர்த்துக் கேட்பாரில்லை. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த 75 நாட்களும் என்ன நடந்தது என்பது வெளியுலகுக்கு இன்னமும் தெரியாத வகையில் ரகசியம் பேணப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழக முதல்வர் திருமதி சசிகலா நடராஜன் வருகிறார்! பராக்! பராக்!! பராக்!!! - என்று கடந்த சில நாட்களாக மக்கள் பிரதிநிதிகள் கூறிக் கொண்டிருந்தார்கள். இப்போது சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தியுள்ளனர். நாளை யாரோ என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது. சசிகலாவின் முதல்வர் கனவில் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மம் அடங்கியிருப்பதாக மக்களால் பேசப்படுகிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் தன் முதல்வர் கனவிற்கான காய்களை படிப்படியாக நகர்த்தினார் சசிகலா. மக்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக ஜெயாவின் மரணத்திற்குப் பின் உடனடியாக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் நாட்காலியில் அமர வைத்தார் சசிகலா. பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றினார். தொடர்ந்து முதல்வர் பதவிக்கு வைத்த குறி இப்போது தவறியிருக்கிறது. முதல்வர் ஆசனம் பறிபோனாலும் கட்சியையேனும் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று அதற்கான முயற்சிகளிலீடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் சசிகலா தனது சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமாக தனக்கு பதிலாக முன்னிறுத்திய எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார். இதுவரை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் பதவியை இழந்துள்ளார். ஆனாலும் பழனிச்சாமியும் தனது பெரும்பான்மையை நிரூபித்தால்தான் முதல்வராக எஞ்சிய ஆட்சிக்காலத்தைத் தொடர முடியும். தமிழ்நாடு பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வரும் சூழலில் உறுதியற்ற அரசியல் சூழல் தமிழ்நாட்டை செயல்படாத மாநிலமாக மாற்றியுள்ளது. தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் என்பதாக ஜெயலலிதாவை வெற்றிபெற வைக்க செலுத்திய வாக்கின் மூலம் பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகிய இரு முதல்வர்களைப் பெற்றுள்ளனர். வாழ்க தமிழகம்.
ஜனநாயகம் என்பது மக்களாட்சி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி. மக்களின் மனமறிந்து நடாத்தப்படுவதுதான் உண்மையான மக்களாட்சியாக இருக்கும். மக்களின் பிரதிநிதிகளால்தான் சட்டங்களும் இயற்றப்படுகின்றன. ஆனால் சட்டங்கள் வாக்களித்த மக்களுக்கு சார்பாக என்றுமே இருந்ததில்லை. மக்களிடம் வாக்குக் கேட்டு பதவிக்கு வரும் மக்கள் பிரதிநிதிகள் பதவி கிடைத்த பின் அதிகாரத்தை தமது சுயநலனுக்காக பயன்படுத்திக் கொள்வதுடன் மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களையும் தமக்கு சார்பாக மாற்றியமைத்துக் கொள்கின்றனர். அதிகார போதை மிகவும் ஆபத்தானது. கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளிருந்து கொல்லும் கொடிய விஷம் அது. ஆனால் அந்த விஷத்தை அருந்தவே அரசு அதிகார நாற்காலியில் அமர்பவர்கள் ஆசைப்படுகிறார்கள். அரசாங்கத்தை தமது சொத்துக்களை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு கருவியாகவே இன்றைய அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள். மக்களின் பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. எந்தப் பிரச்சினையைத் தீர்த்தால் தமது ஆதரவு அதிகரிக்கும் எனக்கணிப்பிட்டு அதன்படியே செயல்படுகிறார்கள். மாற்றத்தை மக்களே ஏற்படுத்த வேண்டும். செய்வீர்களா? செய்வீர்களா??
நல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சி
ReplyDeleteமிக்க நன்றி தோழரே!
Deleteநாளைய தமிழக முதல்வர் யார்?
ReplyDeleteகாலம் பதில் சொல்லுமே!
சொல்லிவிட்டது நண்பரே! எடப்பாடியார் வென்றுவிட்டார்.
Deleteஏ1 குற்றவாளியின் வழியில் ஆட்சியை நடத்துவோம் என்றால் கொள்ளை.ஊழல், பிற பிற என்றுதானே அர்த்தம்.....
ReplyDeleteநிச்சயமாக. பன்னீரும் இதைத்தானே சொல்கிறார்? யாரைத்தான் நம்புவதோ?
Delete