வாசிப்பும் பகிர்வும் - 03 | வாசிப்பது எப்படி - செல்வேந்திரன்| வாசிப்பு அனுபவக் குறிப்புகள்
பா. ராகவன் எழுதிய உக்ரையீனா புத்தகம் பற்றிய எனது எண்ணங்களை கடந்த பதிவில் பகிர்ந்திருந்தேன்.
இன்று நாம் பார்க்கவிருக்கும் புத்தகம் - வாசிப்பது எப்படி?
நூலாசிரியர் - செல்வேந்திரன்
தலைப்பைப் பார்த்ததும் இதற்கெல்லாம் ஒரு புத்தகம் தேவையா என்ற எண்ணம் நமக்குள் எழலாம். ஆனால் அதற்கான தேவை இருக்கிறது என்பதை இந்த புத்தகத்தை வாசித்தால் உணர்ந்து கொள்ளலாம்.
82 பக்க கட்டுரைகளை மட்டும் கொண்ட ஒரு புத்தகம் இது. ஒருசில மணிநேரத்திற்குள் இதனை வாசித்துவிட முடியும்.
ஆனால் ஆசிரியர் சொல்ல வந்த கருத்தை நாம் உணர்ந்து வாசிப்பது அவசியம்.
நாம் வாசிப்பு என்ற உடனேயே புத்தக வாசிப்பை மாத்திரமே கருத்திற்கொள்வோம். ஆனால் நாளிதழ் வாசிப்பதும் வாசிப்பின் ஒரு அங்கம் என்பதையும், புத்தகம் வாசிப்பவர்கள் நாளிதழ்களை வாசிக்கப் பழக வேண்டும் என்பதையும் செல்வேந்திரன் வலியுறுத்துகிறார்.
உயிருள்ள பாடப்புத்தகம் என நாளிதழ்களை அழைக்கும் செல்வேந்திரன், அந்த நாளிதழ்களை எப்படி வாசிப்பது என நமக்கு கற்றுத்தருகிறார்.
ஆசிரியர் நமக்கு ஒரு கோரிக்கையை முன்னுரையில் முன்வைக்கிறார். இந்த புத்தகத்தை முழுதாகப் படிக்கும் பொறுமை இல்லாதவர்கள் வாசிப்பதனால் கிடைக்கும் பொருளாதார அனுகூலங்கள் மற்றும் மேம்படுத்த சில வழிகள் ஆகிய இரு அத்தியாயங்களை மட்டுமாவது வாசிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
வாசிப்பது பொருளாதார ரீதியான அனுகூலங்களை நமக்கு பெற்றுத் தருகிறது. வாசிப்பு நம்மை மேம்படுத்தும். அது பொருளாதார அனுகூலங்களை நோக்கி நம்மை இட்டுச் செல்லும். ஆகவே வாசியுங்கள்.
முறையான வாசிப்பு பழக்கம் இல்லாமையினால் பலரும் தமது வாழ்க்கையில் எதிர்கொண்ட சிரமங்களை எழுத்தாளர் செல்வேந்திரன் இங்கு குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவமானங்கள் நமக்கு நேராதிருக்க வேண்டுமாயின் நாம் வாசிக்க வேண்டும்.
தான் வாசிப்பது மட்டுமின்றி தன்னைச் சார்ந்த, சாராத அனைவரையும் வாசிப்பு சென்றடைய வேண்டும் என செல்வேந்திரன் விரும்புகிறார். ஆகவே தொடர்ச்சியாக அது குறித்து பல இடங்களில் பேசியும் வருகிறார்.
வருடத்திற்கு ஒருமுறையேனும் சில நூல்களை வாங்குங்கள். வாரம் ஒருமுறையேனும் பத்திரிகைகளை வாங்குங்கள். மாதம் ஒருமுறையேனும் சஞ்சிகை வாங்குங்கள். இது போதும் நீங்கள் வாசிப்பதற்கு. இது போதும் நீங்கள் தெளிவு பெறுவதற்கு. இது போதும் உங்கள் வாழ்க்கை வளம் பெறுவதற்கு.
ஆகவே,
வாசிப்போம்!
வாசிப்பை நேசிப்போம்...!
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்