ஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் - 02
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முக்கியமானது பிரஜைகள்
முன்னணியின் செயலாளர் நாயகமும் மகாராஜா ஊடக நிறுவனத்தின் மின்னல்
நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரங்கா தொடர்பானது. அண்மையில் காணொளி ஒன்று
வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையகத்தில் 11 பெண் வேட்பாளர்களை
நிறுத்திவிட்டு சுதந்திரக் கட்சியில் தேசியப் பட்டியலில் இடம்
பிடித்துள்ளார். இது எந்த வகையில் நியாயம் எனக் கேட்கத் தோன்றுகிறது.
ஐ.தே.க வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் ரங்காவின் மின்னல்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே மரணமானார். இது பல
விதங்களிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் ரங்கா சுதந்திரக்
கூட்டமைப்புடன் நெருக்கத்தைப் பேணி வந்ததும் சந்தேகத்துக்குரியதாகிறது.
மின்னல் பக்கச் சார்பற்ற நிகழ்ச்சி என விளம்பரப்படுத்தப்பட்டு வந்தாலும்
மகாராஜா நிறுவனத்தினதும் வேறு சில நபர்களினதும் சுய இலாபத்திற்காகவே
நடாத்தப்படுகிறது என்பது தற்போது புலனாகிறது.
ரங்கா தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியில் தொலைபேசி உரையாடல்கள்
நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் நேயர்கள் ஏற்படுத்துவதில்லை. மாறாக
ரங்காவே நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு என மக்களை நம்ப வைப்பதற்காக
செய்திருக்கும் ரகசிய ஏற்பாடே அது. மேலும் ரங்கா தனக்குப் பிடிக்காத
அரசியல் வாதிகளை திட்டுவதற்கு வருபவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். இது
தான் அந்தக் காணொளி சொல்லும் செய்தி. ஊடகவியலாளராகவும் அரசியல் வாதியாகவும்
செயற்படும் ரங்காவிடமிருந்து மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. இலங்கையின்
முன்னணி தமிழ் ஊடகமான சக்தி தொலைக்காட்சியும் இதற்கு உடந்தை என்பது இன்னும்
அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.
இலங்கையின் சக்தி வாய்ந்த ஊடகமாக மகாராஜா தனது நடுநிலையைப் பாதுகாக்கத்
தவறிவிட்டது. சிரச ஊடகவியலாளர் ஐக்கிய தேசிய கட்சியிலும் சக்தி ஊடகவியலாளர்
சுதந்திரக் கூட்டமைப்பிலும் உள்ளனர். மேலும் சுதந்திரக் கூட்டமைப்பை
பிரதிநிதித்துவப் படுத்தும் ரங்கா தனது புகழை அதிகரிப்பதற்கு மலையகத்தில்
பெண் வேட்பாளர்களை போட்டியிடச் செய்துள்ளார். இது நியாயமா? வடக்கை
பிறப்பிடமாகக் கொண்ட ரங்கா மலையக மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி
பலனடைந்து வருகிறார். இது இனியும் தொடர வேண்டுமா என்பதை மக்களே முடிவு
செய்ய வேண்டும்.
ரங்காவின் மின்னல் நிகழ்ச்சி தொடர்பில் சில விடயங்களை முன்வைக்க வேண்டும். சரி வர ஒரு விடயத்தை தடங்கலின்றி சொல்லி முடிக்கத் தெரியாத ஒருவர்தான் இந்நிகழ்ச்சித் தொகுப்பாளரான ரங்கா. முன்னேற்பாடு செய்யப்பட்ட அழைப்புகளுடன் அரசியல் வாதிகளை கிண்டி விட்டு அதில் உருவாகும் பிரச்சினைகளில் குளிர் காய்பவர் இவர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசியல் வாதிகளின் கருத்துக்களுக்கு இடம்கொடாமல் தனது கருத்துக்களை அவர்கள் மீது வலிந்து திணிக்க முயல்வார். தேவையற்ற விடயங்களை நிகழ்ச்சியின் முக்கால்வாசி நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கடைசி நேரத்தில் சூடான விவாதத்தைக் கிளறிவிட்டு நிகழ்ச்சியை முடித்துவிடுவார். இதனால் குறித்த அரசியல் வாதிகளுக்குள் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும். இதுவே அவரது தேவையுமாகும்.
இவ்வாறுதான் காலஞ்சென்ற மகேஸ்வரன் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரைப் பழி வாங்கும் நோக்கில் அவரைக் கிளறி அவர் இரு வார காலத்தில் வெளிடவிருந்த இரசிய ஆவணம் தொடர்பில் வெளி உலகுக்கு அறியத்தந்தார். வெளிவந்தது இரகசிய ஆவணமல்ல, அவரது மரணச் செய்தியே. தற்போது வெளியாகியுள்ள காணொளியை நம்பாமல் இருப்பதற்கான எவ்விதமான அடிப்படையும் நம்மிடம் இல்லை. தற்போது தேர்தல் முடிவடையும் வரை மின்னல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தேர்தல்கள் ஆணையாளர் தடை விதித்துள்ளார். இதன்போது பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் திரையிட ரங்கா அனுமதி கோரியுள்ளார். இதிலிருந்தே மின்னல் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பது புலனாகிறதல்லவா?
மகிந்த அரசின் கைக்கூலியான ரங்காவின் பிரஜைகள் முன்னணி சார்பாக இம்முறை 11 பெண் வேட்பாளர்கள் மலையகத்தில் களம் இறக்கப்பட்டுள்ளனர். பெண்கள் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்ற இக்காலப்பகுதியில் ரங்காவை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமே. இதுவரை எந்தவொரு கட்சியும் 100% பெண் வேட்பாளர்களை களமிறக்கியதில்லை. ஆனால் ரங்காவின் செயல்பாடுகளால் இதனை ஆதரிக்க முடியாத நிலையே காணப்படுகிறது. சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் தனக்கான இடத்தை ஒதுக்கிக் கொண்டு தனது கட்சியில் பெண் வேட்பாளர்களை தனியே போட்டியிடச் செய்ததன் பின்னணி குறித்து நாம் சிந்திக்காமல் இருக்க முடியாது. வடக்கை பிறப்பிடமாகக் கொண்ட ரங்கா மத்தியில் ஏன் உறுப்புரிமை பெற வேண்டும்?
எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட விரும்பும் ஒருவர் தான் பிறந்த மாகாணத்தில் மாத்திரமே போட்டியிட முடியும் என சட்டத்தால் வரையறுக்க வேண்டும். இல்லையேல் ரங்கா போன்றவர்கள் தொண்டமானைப் போல் மலையகத்தை சீரழிப்பதை தடுக்க முடியாது போய்விடும்.
தேர்தலுக்கான காலம் நெருங்கி வருகிறது. ஆகவே நிச்சயம் அனைவரும் தவறாது வாக்களிப்போம். வாக்களிக்கும் முன் சிந்திப்போம். மக்களுக்கான அரசாங்கத்தை அமைக்கவே ஜனவரி 8 இல் மாற்றத்தை ஏற்படுத்தினோம். அதே மாற்றத்தை ஆகஸ்ட் 17 இலும் ஏற்படுத்த உறுதி பூணுவோம். ஏமாற்று வித்தைக்காரர்களை நிராகரிப்போம். எமக்காக சேவை செய்யத் தயாராகவுள்ள இளம், புதிய அரசியல் வாதிகளை கட்சி பேதமின்றி ஆதரிப்போம். புதிய இலங்கையை உருவாக்குவோம்.
நல்லது விரைவில் நடக்கட்டும் - ஒற்றுமையோடு...
ReplyDeleteமிக்க நன்றி. நாங்களும் அந்த எதிர்பார்ப்போடு தான் காத்திருக்கிறோம்.
Deleteமக்கள் சக்தியை உணர்த்த வேண்டும். நல்லோரை அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்
ReplyDeleteஆம் நண்பரே! மக்கள் நல்லவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என நம்புகிறேன்.
Delete