சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்!
பல நிறைவேறாத கனவுகளுக்குச் சொந்தக்காரனான ஒரு மாபெரும் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் நினைவு. மஹாகவி சுப்பிரமணிய பாரதியார். எட்டயபுரத்துக் கவிஞன். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்பது உட்பட தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அவன் கண்ட கனவுகள் பலவும் நிராதரவாகக் கிடக்கின்றன. முகநூல், டுவிட்டர் மற்றும் இன்னபிற தளங்களிலும் எல்லோரும் பாரதி புகழ் பாடுகின்றனர். எல்லாம் இன்றிரவோடு சரி. நாளைய ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்களோடு எல்லாம் மறந்துபோய்விடும். வாருங்கள், ஒரு பாரதி பாடலைப் பார்த்துவிட்டுப் பேசலாம்.
(சிந்து நதியின்.......)
இன்று மட்டுமில்லை, என்றுமே போற்றப்பட வேண்டிய கவிஞன் பாரதி. மண் விடுதலைக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டவன். பாரதியைப் பற்றி இன்றளவிலும் ஏராளமான ஆய்வுகள், விமர்சனங்கள் மற்றும் தரவு ரீதியான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இனி பாரதியைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டுமானால் புதியதொரு கோணத்தை கண்டுபிடித்தாக வேண்டும். ஆயினும் என்ன பயன்? பலருக்கு கலாநிதிப் பட்டங்களையும் இன்னபிற கௌரவங்களையும் பேரையும் புகழையும் வாங்கிக் கொடுத்துள்ளதே தவிர சமூகத்தின் பாமர மக்களிடையேயோ அல்லது உயர் வர்க்கத்தினரிடையேயோ எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இன்னும் ஒரு பாரதி பாடல் - நிற்பதுவே நடப்பதுவே......
ஏட்டில் மட்டும் வைத்துப் பாதுகாப்பதற்கு எழுதிவைக்கவில்லை நம் எட்டயபுரத்து முண்டாசுக் கவி. எடுத்துப் படித்து அதன்வழி மக்கள் பயனுற வேண்டும் என்றே எழுச்சி கொண்டு எழுதினான். இன்றைய நாளில் பாரதி எழுதிய கவிதைகளில் அது சிறந்தது, இது சிறந்தது என்று சிலாகித்துச் செல்ல நான் விரும்பவில்லை. பாரதிக்கும் நமக்கும் தூரம் அதிகம். அவன் எழுச்சி மிக்கவன். நாம் இன்னமும் எழுச்சியின் சுடரையே தரிசிக்காதவர்கள். ஒன்று மட்டுமே சொல்லலாம். உண்மையாய் உள்ளம் ஒன்றி உச்சரிக்க இயன்றவர்கள் மட்டும் பாரதி பற்றியும் மற்றைய உன்னதமான தமிழ்க் கவிகள் பற்றியும் பேசுங்கள். ஏனையோருக்கு இருக்கவே இருக்கிறார்கள் தெருவுக்கொரு போலிக் கவிகள். அவர்கள் வால் பிடித்துத் திரியுங்கள். சின்னஞ் சிறு கிளியே...... - பாரதி பாடல்
முகநூலில் ஒருவர் இப்படிக் கூறியிருந்தார். 'உன்னைப் போல் தலைவர்களின் பிறந்தநாட்களைக் கொண்டாடும் வழக்கம் எம் மத்தியில் இருப்பதால் தான் இன்றைக்கு உன்னையும் நினைத்துப் பார்க்க முடிகிறது.' சமூகம் என்ன நிலையில் இருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பாரதியின் கனவுகள் பலிதமாக வேண்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர இந்நாளில் அவனுக்காய் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. ஹாப்பி பர்த்டே சொல்வதற்கு உங்கள் வீட்டு நாய்க்குட்டியல்ல அவன். தயவு செய்து தமிழனின் பெயரைக் கெடுக்காதீர்கள். நல்ல வேளை பாரதி இன்று உயிரோடு இல்லை. இருந்திருந்தால் அவரது முகநூல் பக்கத்திற்கு வாழ்த்தட்டை அனுப்பியிருப்பார்கள். பாரதி பற்றிய தொகுப்புடன் ஒரு பாடல் - காணி நிலம் வேண்டும்.........
ஏட்டளவில் இருக்கும் பாரதியின் கனவுகளெல்லாம் நிஜமாக வேண்டும். அதுவரை பாரதியின் பிறந்தநாளையும் இறந்தநாளையும் நினைவு கூர்வதில் அர்த்தம் ஏதும் இருக்கப் போவதில்லை. சாதிக் கொடுமை, பெண் விடுதலை, தமிழின் அருமை என்று அவன் பாடியதெல்லாம் தன் சமூகத்தின் உயர்வுக்காகவே அன்றி தன் புகழ் கருதியல்ல. தன்னலம் மறப்போம். அவன் கனவுகள் மனதினில் சுமப்போம். நாளைய விடியல் தமிழர்களுக்கான உண்மையான விடியலாய் அமையட்டும். கேளடா மானிடா.... - பாரதி பாடல்
அன்புடன்,
பாரதியின் கனவுகளுடன்,
சிகரம்பாரதி.
அருமையான தொகுப்பு ..நல்ல அஞ்சலி படைப்பு
ReplyDeleteநன்றி நண்பரே. வாழ்த்துக்கும் வருகைக்கும்.
Delete