கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06


திவ்யாவைப் பற்றிய மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்குடன் நான் "ஹலோ" என்றேன். ஆனால் மறு முனையில் பதில் இல்லை. ஓரிரு வினாடிகளில் இணைப்பு துண்டிக்கப் பட்டது. இணைப்புக் கோளாறா அல்லது நான் பேசவில்லை என்று இணைப்பைத் துண்டித்து விட்டாளா என்பதை அறிந்து கொள்வதற்காக நான் நந்தினிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். வாடிக்கையாளரின் தொலைபேசி இலக்கம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக ஒரு பெண் குரல் சொல்லிப் போனது.

'ஒரு வேளை இது திவ்யா - நந்தினி யின் விளையாட்டாக இருக்குமோ?' என்று கூட என் மனம் யோசித்தது. நாம் ஒன்று நினைத்தால் நடப்பது வேறொன்றாக அல்லவா இருக்கிறது? 

'இது திவ்யாவின் விளையாட்டாக இருந்தால் இந்த பெண் பார்க்கும் படலம் இடம்பெற்றே இருக்காதே? ஆமாம். ஆனால் திவ்யாவுக்கும் நந்தினிக்கும் என்ன உறவு? நந்தினி சொன்னது உண்மையாக இருக்குமா? அதை எப்படித் தெரிந்து கொள்வது? எனது தொலைபேசி இலக்கத்தை திவ்யாதான் கொடுத்தாளா? அல்லது வேறு யாரும் இருக்கக் கூடுமா?' - என்று என் மனதினுள் பலவாறான கேள்விகள் மாறி மாறி எழுந்த வண்ணமிருந்தன. 

ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. திவ்யா - நந்தினி குடும்பத்தினருக்கிடையில் ஏதோ ஒரு நெருங்கிய பிணைப்பு இருக்கிறது. அது எது என்பது தான் புதிராக இருக்கிறது.

'ஆமா... திவ்யாவோட அம்மா அப்பா இன்னிக்கு அங்க வந்திருக்கலையே...... நமக்குத்தான் அவங்கள தெரியுமே....? இத நாம முன்னமே யோசிக்கலையே?' - மனம் இப்போது தான் இதை மீட்டெடுத்திருந்தது. வர வர குழப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறதே தவிர குறைவதாயில்லை.

'நாளை திவ்யாவை சந்தித்தால் எல்லாம் தெரிந்துவிடப் போகிறது. அதுவரை பொறுத்திருப்போம்.' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும் மனம் அதையெல்லாம் பொருட்படுத்துவதாயில்லை. இன்றைய இரவின் சிறைக் கைதி நான்தான் போலும். மிகக்குறுகிய நேரத்தில் வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறிப் போகிறது? பலநேரங்களில் மிகக்குறுகிய கால அவகாசத்தில் தான் எனது தீர்மானங்களை எடுக்கும்படிக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன். ஏன் எனது காதலின் முடிவைத் தீர்மானிக்கும் சமயத்தில் கூட. இப்போதும் அதே நிலைதான்.

ஆனால் இன்றாவது கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை கைவசம் வைத்திருக்கிறேன். ஆனால் அன்று? வேண்டாம்.... வேண்டவே வேண்டாம்.... அதைப்பற்றி நினைத்தாலே உடல் ஒருமாதிரி சிலிர்த்துக் கொள்கிறது. கண்கள் குளமாகின்றன. மனதைக் கல்லாக்கிக் கொண்டு விழியோரம் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தேன்.

இரவு ஒன்பது மணி! இரவு உணவுக்கான நேரம். அத்தனை நினைவுச் சுமைகளுக்கு மத்தியிலும் அம்மாவின் சாப்பாட்டு வாசனை மூக்கைச் சற்று பதம் பார்க்கத்தான் செய்தது. திவ்யாவும் நன்றாகச் சமைப்பாள். எதையாவது புதிதாக ஒரு பெயரைச் சொல்லிக் கொண்டு அதைக் கொண்டு வருவாள். அந்தப் பெயர் வாய்க்குள் நுழைவதே இல்லை. ஆனால் அந்த புதிய சமையல்...... அப்படி ஒரு அருமை.

"திவ்யா...... உன் கைப்பக்குவத்துக்கு ஒரு கைக்காப்பு செஞ்சு போடலாம்னு இருக்கேன்...."

"என்ன கிண்டலா?"

"இல்ல... நிஜமாத்தான். அசத்திட்ட...."

தலையைக் கீழே குனிந்துகொண்டு தன் முகத்தில் வெட்கம் படர மென்மையாய்ப் புன்னகைத்தாள்.

"காப்பெல்லாம் வேணா... நீங்க எப்பவும் என் கூடவே இருக்கணும்...."

"கண்டிப்பா....."

இந்நிகழ்ச்சி நடந்து மூன்றாண்டுகளாவது இருக்கும். இன்றோ இருவரும் பிரிவின் கைதிகளாய்..... 

எங்கள் 'பிரிவு' என்னும் குழந்தைக்கு இன்று பிறந்தநாள். எப்படியோ சரியாக இரண்டாண்டுகள் உருண்டோடிவிட்டன. நிச்சயதார்த்தத்தில் வைத்து திவ்யாவைக் கண்டதும் இது என் நினைவுக்கு வந்தது. அப்போது ஏதோ ஒரு உணர்வு நெஞ்சை அப்படியே கசக்கிப் பிழிந்தது போலிருந்தது. அதே தினத்திலேயே மீண்டும் சந்தித்திருக்கிறோமே? காலம் 'பிரிவு' என்னும் எங்கள் குழந்தையை காலனுக்கு காணிக்கையாக்க முடிவு செய்து விட்டதோ? 

அம்மா உணவு உண்ண அழைத்ததும் ஒரு செயற்கை இயல்பு நிலையை எனக்குள் வரவழைத்துக் கொண்டு அனைவருடனும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். தொண்டைக்குள் இறங்க மறுத்த உணவை கட்டாயப் படுத்தி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தேன். சாப்பிடும் போது நாங்கள் எதுவும் கதைப்பதில்லை. அது அப்பாவுக்கு பிடிக்காது. எங்களுடனேயே அம்மாவும் சாப்பிட்டுவிடுவார். எல்லோரும் சாப்பிட்டானதும் எனது அறைக்கு நான் திரும்ப எத்தனித்த வேளை "என்னண்ணா...... பொண்ணப் பத்தி எதுவுமே சொல்லாம போற?" என்று குறும்பாகக் கேட்டாள் தங்கை நிவேதிதா.

அதிர்ச்சியில் ஒரு கணம் நான் உறைந்தே போனேன். 'இவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே' என்று குழம்பி நின்றேன்.

"மௌனம் சம்மதம்னு எடுத்துக்கலாமா?" - நிவேதிதா தன் பிடியை விடுவதாயில்லை.

"அதப் பத்தி இன்னும் யோசிக்கல....." தயங்கியவாறே சொன்னேன் நான்.

"இதப் பாருப்பா... யோசிக்கிறேன்னு சொல்லியே காலத்தைக் கடத்திடலாம்னு நினைக்காத. இந்த தடவை ஒரு முடிவ சொல்லிரு. இந்தக் கிழமைக்குள்ள சொன்னாத்தான் நல்ல நாளெல்லாம் பார்க்க வசதியாயிருக்கும். அதுவுமில்லாம சீக்கிரமா ஒரு முடிவ சொன்னாத்தானே நல்லாருக்கும்?" அம்மா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். செய்வதறியாது குழம்பிப் போனேன் நான்.

"சரிப்பா.... நல்லா யோசிச்சிட்டு உன் முடிவ சொல்லு. களைப்பா இருப்ப.... இப்ப போய் தூங்கு" என்று அப்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளியைத் தந்தார் அப்பா.

"சரிப்பா" என்றபடி என் அறைக்குள் வந்து கதவைச் சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்தேன். மனம் கடலலையென கொந்தளித்துக் கொண்டிருந்தது. இரவின் சிறைக்குள் நினைவுகள் என்னும் வேலிகளிட்டு பூட்டப்பட்டேன் நான். காவல் செய்த களைப்பின் மிகுதியில் இரவும் நினைவுகளும் சற்றுக் கண்ணயர்ந்ததொரு பொழுதில் சற்றே உறங்கிப் போனேன் நான். 

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06 
https://newsigaram.blogspot.com/2012/08/kalyaanavaibogam-06.html 
கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம் 

Comments

  1. தொடருங்கள், புதுப்புது மாற்றங்களுடன் தொடரட்டும். இருவரின் காதல் நினைவுகளை அதிகம் எதிர்பார்த்தேன் நண்பா. அசத்துங்கள்...

    ReplyDelete
    Replies
    1. முதல் ஆளாய் வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் உள்ளமே. நானும் இருவரின் காதல் நினைவுகளையும் உள்ளடக்க நினைத்தேன். ஆனால் முடியாமல் போய்விட்டது. அடுத்த அத்தியாயத்தில் முயற்சிக்கிறேன். நன்றி உள்ளமே.

      Delete
    2. எனக்கு காதல், ஊடல், அது சம்பந்தப் பட்ட நினைவுகள், பேச்சுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதனால் தான் கேட்டேன். காதல் நினைவுகளை தழுவ விடுங்கள் நண்பரே.

      Delete
    3. ம்ம்ம்..... காதல் நினைவுகள் சுகமான சுமையல்லவா? நிச்சயமாய் உங்களுக்காய் அதனை எழுதுகிறேன். காத்திருங்கள். நன்றி உள்ளமே.

      Delete
    4. எழுதினால் மகிழ்ச்சியடைவேன்...

      Delete
    5. அதற்கென்ன? எழுதினாப் போச்சு. வாசிக்கும் உள்ளங்கள் நேசிக்கும் கதையாக இது அமையவேண்டும் என்பதால் பார்த்துப் பார்த்து செதுக்கிக் கொண்டிருக்கிறேன். ஆதலால் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இக்கதைத் தொடரில் கட்டாயம் இடம் பற்றும் நண்பரே. காத்திருங்கள் உள்ளமே.

      Delete
  2. அடுத்த பதிவில் முடிவு தெரிந்து விடும்...
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்குறீங்க??? பார்க்கலாம் தோழரே. பார்க்கலாம் உள்ளமே. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே,

      Delete
    2. யாரு கண்டா, இவரு மீனாட்சி சுந்தரம் கல்யாணம் மாதிரி ஜவ்வுன்னு இழுத்தா என்ன பாஸ் பண்ணுறது.

      Delete
    3. கதையை இழுக்க வேண்டும் என்றோ அவசரமாய் முடிக்க வேண்டும் என்றோ நான் ஒரு போதும் எண்ணியதில்லை. கதைக் களத்தோடு சேர்ந்து நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். முடியும் போது முடியும். ஆனால் இழுவையாகவெல்லாம் இருக்காது. இருக்கின்ற சுவாரஷ்யம் துளியும் குறையாமல் கதைக் களத்தை நகர்த்திச் செல்ல வேண்டியது எனது பொறுப்பு. தங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் உள்ளமே.

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா. சந்திப்போம் உள்ளமே.

      Delete
  4. காத்திருப்பின் கனம் கூடுகிறது நண்பா....வாழ்த்துகிறேன் மகிழ்வோடு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே. காத்திருப்பதில் தானே சுகம் அதிகம்? சந்திப்போம் உள்ளமே.

      Delete
  5. அடுத்த்நாள்?தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி உள்ளமே. முதல் வருகை தொடர் வருகையாகட்டும். காத்திருங்கள். சந்திப்போம் உள்ளமே.

      Delete
  6. பின்னும் மொத்தமாக படித்துவிட்டு சொல்கிறேன் வேலைகளை அதிகமாகவிருப்பதனால் தொடர் பதிவுகளை வாசிக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.....
    விரைவில் படித்துவிடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி உள்ளமே. தங்கள் கருத்தினை அறிய ஆவலாய் உள்ளேன். சந்திப்போம் உள்ளமே.

      Delete
  7. இன்று தான் உங்க கதைய வாசித்தேன்.. நான் ஒரு எழுத்தாளனோ விமர்சகனோ இல்லை.. நீங்க நண்பர் என்ற உரிமையில் கூப்பிட்டதால அதே உரிமையோடு சில வார்த்தைகள்..

    பகுதி 1 - நல்ல முன்னோட்டம்
    பகுதி 2 - //மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது//

    புதிதாக வாசிப்பவர்கள் குழம்பும் வாக்கிய அமைப்பு.. கதா பாத்திர குழப்பம் வாக்கிய முரணால் ஏற்பட்டு விடும்..

    //இந்த இடத்தில் என்னைப் பற்றியும் சிறிது சொல்ல ஆசைப் படுகிறேன். நான் ஜெயகுமார். அப்பா சிவசுப்ரமணியம், அம்மா அமுதா, தங்கை................//

    இரண்டாம் பகுதியில் ஏன் இன்னொரு முன்னோட்டம்? காரணம் அந்த பாத்திரம் ஏற்கனவே அறிமுகம் ஆகி விட்டார்.. (அடிக்கடி பாத்திர வர்ணனைகள் வந்தால் ஓகே.. அடிக்கடி முன்னோட்டம் வந்தால் போரடிக்கும் )

    //இப்போது எனக்கு திருமணத்தை முடி................................................ளையும் கரை சேர்த்து விடலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.//

    அண்ணன், தங்கை கல்யாணத்தில் முன் நின்று வேலை பார்த்து விட்டு அதற்க்கு பிறகே கட்டி வைக்கவே பெற்றோர் விரும்புவார்கள். இதற்க்கு நீங்கள் உபயோகித காரணம் ஏற்று கொள்வது போல இல்லை.. வாசகனாய் பாருங்கள்..

    பகுதி 3 - இதில் உண்மையிலே உங்க எழுத்து நடை நன்றாக இருந்தது (ஆரம்ப இட வர்ணனை சூப்பர்)

    பகுதி 4 - //இன்று வரைக்கும் - ஏழு வருடங்களாக அதைத் தான் பயன்படுத்தி வருகிறோம்.//

    இது சொதப்பலா என்று உங்க மீதி கதை தான் தீர்மானிக்கும்.. மற்றபடி நல்ல சஸ்பென்ஸ்..

    பகுதி 5 - ஓகே

    பகுதி 6 - //இன்றோ இருவரும் பிரிவின் கைதிகளாய்// //எங்கள் 'பிரிவு' என்னும் குழந்தைக்கு இன்று பிறந்தநாள்// அடுத்தடுத்து ஏன் வித்தியாச வர்ணனை முரண் பட்டது என் பார்வையில்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஹாரி! முதலில் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி உள்ளமே. ஒரு குட்டிப்பதிவாகவே தங்கள் கருத்துரை அமைந்துவிட்டது. இம்மாதிரியான கருத்துரைகளைப் பார்க்கும் போது மனம் மிகவே மகிழ்கிறது. கதையை நன்றாக உள்வாங்கி வாசித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. நன்றிகள் உள்ளமே. ஒரு விமர்சகனாய் இல்லாமல் நண்பன் என்ற உரிமையில் சொன்னதால் கருத்துக்களின் வலிமை அதிகம் என நான் எண்ணுகிறேன்.

      #இரண்டாம் பகுதியில் ஏன் இன்னொரு முன்னோட்டம்? காரணம் அந்த பாத்திரம் ஏற்கனவே அறிமுகம் ஆகி விட்டார்.. (அடிக்கடி பாத்திர வர்ணனைகள் வந்தால் ஓகே.. அடிக்கடி முன்னோட்டம் வந்தால் போரடிக்கும் )# கதாநாயகனான ஜெயகுமார் தானே கதை சொல்லியாக வருவதால் அவரது எண்ண ஓட்டங்களின் அடிப்படையிலேயே கதையையும் நகர்த்திச் செல்ல வேண்டியிருப்பதால் தேவைப்படும் இடங்களில் மட்டுமே அறிமுகங்களை வழங்க வேண்டியிருக்கிறது. அதனால் தான் அடிக்கடி முன்னோட்டங்கள் வருகின்றன.

      #அண்ணன், தங்கை கல்யாணத்தில் முன் நின்று வேலை பார்த்து விட்டு அதற்க்கு பிறகே கட்டி வைக்கவே பெற்றோர் விரும்புவார்கள். இதற்க்கு நீங்கள் உபயோகித காரணம் ஏற்று கொள்வது போல இல்லை.. வாசகனாய் பாருங்கள்..# உண்மைதான் தோழரே. ஆனால் எல்லாச் சூழ்நிலைகளிலும் அப்படி அமைவதில்லையே? அதற்கு நான் கூறிய காரணம் இது #இப்போது எனக்கு திருமணத்தை முடித்து வைத்து விட்டால் தங்கை நிவேதிதாவின் படிப்பு முடியும் போது அவளது திருமணத்திற்காக ஒரு தொகைப் பணத்தை சேர்த்துக் கொண்டு அவளையும் கரை சேர்த்து விடலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.# தங்கள் கூற்றை பரிசீலிக்கிறேன் உள்ளமே.

      #பகுதி 3 - இதில் உண்மையிலே உங்க எழுத்து நடை நன்றாக இருந்தது (ஆரம்ப இட வர்ணனை சூப்பர்)# நன்றி தோழா. அது தானா வருதுப்பா...........

      #இது சொதப்பலா என்று உங்க மீதி கதை தான் தீர்மானிக்கும்.. மற்றபடி நல்ல சஸ்பென்ஸ்..# சொதப்பிட்டனோ? இல்லையே.... பார்க்கலாம்....

      பகுதி 6 - //இன்றோ இருவரும் பிரிவின் கைதிகளாய்// //எங்கள் 'பிரிவு' என்னும் குழந்தைக்கு இன்று பிறந்தநாள்// அடுத்தடுத்து ஏன் வித்தியாச வர்ணனை முரண் பட்டது என் பார்வையில்..# ஆமாம் நண்பனே. கவனிக்கவில்லை. தங்கள் ஆழமான வாசிப்புக்கு மிக்க நன்றிகள். இனி வரும் பகுதிகளில் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை தங்கள் பொறுமை மிக்க வாசிப்பிற்காய் நன்றிகள் பல உள்ளமே.

      Delete
  8. மொத்த கதையில் பிடித்த வரிகள்

    //பரிச்சயமில்லை என்று தீர்ப்பளித்தது மனம்.//

    //இன்றோ இருவரும் பிரிவின் கைதிகளாய்//

    //எங்கள் 'பிரிவு' என்னும் குழந்தைக்கு இன்று பிறந்தநாள்//

    //அழைத்ததும் ஒரு செயற்கை இயல்பு நிலையை எனக்குள் வரவழைத்துக் //

    //இரவின் சிறைக்குள் நினைவுகள் என்னும் வேலிகளிட்டு பூட்டப்பட்டேன்//

    ReplyDelete
    Replies
    1. அருமையான ரசனை ஹாரி உங்களுக்கு. கதையை இன்னும் திறம்பட நகர்த்திச்செல்ல இம்மாதிரியான கருத்துரைகள் மிகுந்த உற்சாகத்தை வழங்குகின்றன. "கல்யாண வைபோகத்துடன்" தொடர்ந்து இணைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி உள்ளமே.

      Delete
  9. இன்று தான் உங்கள் தளத்தில் நுழைந்ததால் விறுவிறுப்பான கதையை ஒரே மூச்சில் 6 பகுதிகளையும் படித்து விட்டேன். என்ன செய்ய இனி காத்திருக்கத்தான் வேண்டும். நன்றாக்ச் செல்கிறது.
    ஹாரி பாட்டர் கூறியபடி நானும் அந்தப் பெண்தான் காதல் தோல்வி அடைந்தவள் எனப் புரிந்து கொண்டேன்.
    அடுத்தடுத்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க உள்ளமே. வருகைக்கும் கருத்துரைக்குமாய் நன்றிகள் பல. முழுமையாய் வாசித்தமைக்கு நன்றிகள் உள்ளமே. காதல் தோல்வி அடைந்த பெண் திவ்யா தானே தவிர நந்தினி அல்ல. தொடர்ந்து இணைந்திருங்கள் உள்ளமே.

      Delete
  10. பாரதி... கடைசி பத்தி மிக அருமை!
    வாழ்த்துக்கள். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அருணா. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி உள்ளமே. சந்திப்போம்.

      Delete
  11. enkku oru santhegam pen parththu date mudivu panninathukku piragu thane nichyathartham.
    ana story super

    ReplyDelete
    Replies
    1. அனுபவமோ? நான் அறிந்த வகையில் குறிப்பிட்டிருக்கிறேன். நன்றி தோழி.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!